Sunday 3 November 2013

மாந்திரீகம்-5

                                                                            .

     
            

     எந்திரம் என்பது வழிபாடும் சக்கரம் ஆகும். இதில் அந்தந்த இறைவனின் ஆற்றல் குவித்து வைக்கப்படும் ஒரு சாதனம் ஆகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் வேறுபட்ட எந்திரங்கள் உண்டு. மந்திரம் என்பது உயிர் ஆற்றல் கொண்டது. எந்திரங்கள் போல் மந்திரங்களும் ஒவ்வொரு  தெய்வத்திற்கும் வெவ்வேறாக உள்ளது. எந்திரம் என்பது உடல் ஆகும். மந்திரம் என்பது உயிர் ஆகும். மந்திரத்தின் வாயிலாக எந்திரத்தில் உயிர் உருவாக்கி சக்தி பெற வைக்கப்படுகிறது. அவ்வாறு வைக்கப்பட்ட எந்திரங்கள் கடவுள் சிலைக்கு கீழே வைக்கப்படுகிறது.
   எட்டு வகையான வினைகளுக்கு ஏற்ப எந்திரங்கள் பொன்செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களால் உருவாக்கப்படுகிறது. பின்னர் எட்டு வகை கருமத்திற்கு ஏற்ப திசைகள் பார்த்து வைக்கப்படுகிறது. கடவுளின் தன்மைக்கு ஏற்ப இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம், காரீயம் போன்ற உலோகங்களாலும் கோலத்தாலும், வேம்பு, ஆல், காஞ்சூரி போன்ற மரப்பலகைகளால் உருவாக்கப்படுகிறது. பொதுவாக கடவுளை உருவாக்குபவர்கள் வரிவடிவமான எந்திரங்கள் உருவாக்கி  வாசியவடிவமான மந்திரங்களை உச்சரித்து கடவுளை உருவாக்குகின்றனர். இந்தியா மற்றும் பல நாடுகளில் இவ்விதமாக கடவுள் வழிபாட்டுக்கு எந்திரங்கள் எழுதுவது உண்டு. அவர்கள் தேர்ந்து எடுக்கும்   எந்திரங்கள், எண்கள், பீஜங்கள், எழுத்துக்கள், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்கள் கொண்டதாக  அமைகிறது.

    சில இஸ்லாமியர்கள் இந்த வகை எந்திரங்களை பேப்பரில் எழுதி கொடுப்பார்கள். எந்திரத்தில் வட்டம், சதுரம், முக்கோணம், அறுங்கோணம், ஐங்கோணம், பிறை, போன்ற பல வரிவடிவங்கள் உண்டு. இவைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட தெய்வம் அல்லது பூதம் போன்றவைகள் உண்டு. இத்தகைய எந்திரங்கள் எழுதுவதில் பல வரைமுறைகள் உண்டு. ஒரு எந்திரத்தை பார்த்த உடன் இது வரைமுறைக்கு உட்பட்டதா என்று கணித்து விடலாம்.

  ஒரு முக்கோணத்தின் நடுவில் ஒரு வட்டமான புள்ளி இருப்பின் அதை பிந்துகோணம் என்பர். ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் பிந்துகோணம் இருப்பதை பலர் பார்த்திருப்பர். ஒரு விவரம் தெரிந்த வேதியரோ  மந்திரவாதியோ தனது வேண்டுதலை ஆரம்பிக்கும் முன் தாங்கள் உட்காரும் இருக்கையில் பிந்துகோணத்தைப் போட்டு உட்காருவர். பிந்துகோணம் என்பது ஆண் பெண் சேர்க்கையை உணர்வு பூர்வமாக குறிப்பதாகும். இந்த நிலையை மோனநிலை எனலாம். அல்லது மந்தாரநிலை எனலாம். அல்லது மன ஒருமைப்பாட்டு நிலை எனலாம். உணர்ச்சியின் உச்சக்கட்ட நிலை எனலாம். ஆம் அதுதான் விந்து வெளியேறும் உணர்வு நிலை ஆகும். இந்த மன ஒருமைப்பாட்டு நிலையில் ஒருவர் தனது வேண்டுதலை அல்லது தியானத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக போடப்படுகிறது. அப்படியெனில்  முக்கோணத்திற்கே இவ்வளவு அர்த்தமும் தார்பரியமும் உள்ளது.


           ஆகவே ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான எந்திரங்கள் உள்ளன. அந்தந்த எந்திரங்களை அதற்குரிய மந்திரங்களை தியானித்து உயிரோட்டமாக்கி பின் உருவேற்றி உபயோகிக்க வேண்டும். கோயில்கள் எனில் அத்தகைய உரு ஏற்றப்பட்ட தகட்டின் மேல் சிலையை வைத்து மெழுகால் பீடத்தை பூசி வைப்பதுண்டு. சில தகடுகளுக்கு இதழ்கள் உண்டு. ஒவ்வொரு இதழ்களையும் ஆவணம் என்று கூறுவர். ஒவ்வொரு ஆவணத்திற்கும் அதற்கென்ற பிரத்தியோக மந்திரங்கள் உண்டு.
    
  பொதுவாக  இத்தகைய வரிகளில்  முக்கோணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு முக்கோணத்தின் கூம்புப்பகுதி கீழ்நோக்கி இருக்குமாயின் அது பெண் தன்மையைக் குறிக்கும். சக்தி அம்சம்.


  ஒரு முக்கோணத்தின் கூம்புப்பகுதி மேல் நோக்கி இருப்பின் அது  ஆண் தத்துவம் ஆகிறது. சிவ அம்சம்.



   
  அவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் அறுங்கோணமாகிய நட்சத்திர வடிவம் கிடைக்கிறது. முக்கோணமாகிய ஆணாகிய சிவனும், பெண்ணாகிய சக்தியும் ஒன்று சேர்ந்து அறுங்கோணமாகிய முருகன் உருவாகிறார். இதுதான் தத்துவம் .
      
           உதாரணமாக முருகனின்  அறுங்கோணத்திற்கு சரவணபவ என்ற ஆறு எழுத்தும் அறுங்கோணத்திற்கு உரியதாக அமைகிறது. ஒரு தெய்வத்தின் வரிவடிவம் தகடாகும். அந்த தெய்வத்தின் ஸ்தூல வடிவம் சிலை ஆகும். அந்த சிலையின் சக்திதத்துவம்  உயிர்த்தத்துவம் மந்திர சங்கல்பம் ஆகும். இவ்வாறு தான் ஒரு தெய்வம் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு எந்திரங்களும் எழுதுவதற்கான வழிமுறைகள், நேரங்கள், உலோகங்கள், முதலியன உள்ளன. பொதுவாக நல்ல காரியங்களுக்கு எழுதப்படும் எந்திரம் கிழக்கில் இருந்து மேற்காக கோடு போட்டு எழத ஆரம்பிக்கவேண்டும். அதே போல் மாரணம் போன்ற தீய காரியங்களுக்கு எழுதப்படும் போது மேற்கில் இருந்து கிழக்காக  கோடு போட்டு ஆரம்பிக்கவேண்டும். வளர்ச்சியான காரியங்களுக்கு எந்திரம் எழுதும் பொழுது கீழ் இருந்து மேலாக எழுத வேண்டும். அழிவுக்கான காரணங்களுக்கு மேல் இருந்து கீழாக எழுத வேண்டும் என்று அனுபவம் வாய்ந்தவர்கள் கூறுவார்கள்.
           பொதுவாக எந்திரம் எழுதும் பொழுது ஒரையை கவனிக்கவேண்டும். ஒவ்வொரு ஒரைக்கும் என்னன்ன எழுதவேண்டும் என்ற ஒரு கணக்கீடு உண்டு. இந்த கணக்கீட்டை மாந்திரீக கணிதம் என்ற பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளோம்.
           பொதுவாக எந்திரம் எழுதி முடித்து அதற்கான காரியத்தைச் சாதித்த பின் அந்த எந்திரத்தை என்ன செய்யலாம் என்ற ஒரு கேள்வி எழும்பலாம். ஸ்ரீ சக்கரம், குபேர எந்திரம், மகாலட்சுமி எந்திரம் போன்ற எந்திரங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். பரிகார எந்திரங்களை வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கமல்ல என்ற கருத்து உண்டு.
           பொதுவாக அக்னி தத்துவம் வாய்ந்த எந்திரத்தையும், பூஜை சாமான்களையும் நெருப்பில் இட்டு எரித்துவிடவேண்டும். அல்லது துணி துவைப்பவர் வைக்கும் நெருப்பின் கீழ் புதைக்கலாம். சிலர் சுடுகாட்டின் பிணங்கள் எரிக்கும் தரையின் கீழும் புதைப்பார் உண்டு. 
  வாயு தத்துவ எந்திரத்தை மரம் போன்ற காற்றோட்டமான இடத்தில் கட்டவேண்டும். பொருள்களை காற்றோட்டமான இடத்தில் பரப்பி விடவேண்டும். 
  நீர்த்தத்துவ எந்திரத்தையும்,பூஜை பொருள்களையும் ஆறு, குளம், கிணறு, கடல் போன்ற நீரில் போடவேண்டும். 
 ஆகாயதத்துவ பொருள்களை மலை போன்ற உயரமான இடங்களில் போடவேண்டும். 

  பொதுவாக பரிகார பூஜைக்கு உபயோகப்படுத்தப்படும் பொருள்களை வீட்டிற்கு கொண்டு வருவதோ உபயோகிப்பதோ சிறப்பல்ல.

No comments: